முகப்புத்தகத்தில் முகம் செய் …. குளோபல் தமிழ்ச் …

முகப்புத்தகத்தில் முகம் செய் …. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

04 நவம்பர் 2012

Posted Image

இணையம் தகவற்தொழில் நுட்ப உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இணையம் மனிதர்களின் பௌதீக அசைவியக்கத்தை(physical movement) தூண்டாமல் மெய்நிகர் உலகில் (virtual world) அவர்களை இருந்தஇரையில் இயங்கத்துண்டுகிறது. இதற்குக் காரணமாக இணையத்தில் வளர்ந்து நிற்கும்  சமூக  ஊடக வலையமைப்புக்கள் (social media networks) இருக்கின்றன.  இச் சமூக வலைத் தளங்கள் தனிமனித நடத்தைகளிலும்  சமூகத்திலும் அந்தச்சமூகத்தின் அரசியலிலும் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து   நின்று ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான ஒரு முன்குறிப்பை இக்கட்டுரை தரமுயல்கிறது.

சாதாரண மனிதர்களின் நட்பு வட்டம் சிறிதாக இருந்த காலம் போய் அது சமூக ஊடக வலையமைப்புக் காரணமாக விரிவடைந்து வருகிறது. பௌதீக தூரத்தில் தங்கியில்லாமல் மனிதர்கள் தங்கள் அகத்தையும் புறத்தையும் பரிமாறிக் கொள்கின்றார்கள். முன்பின் தெரியாதவர்களுடன் நட்பை உருவாக்க மனிதர்கள் தயங்கிய காலம் போய்  இந்த வலைத்தளங்களில் எவருடனும் நட்பை உருவாக முனையும் தன்மை  அதிகரித்து வருகிறது.  குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்தப்பண்பை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.  இணைய இணைப்புள்ள வீடுகளில் முதியவர்களும் சமுக ஊடகவலைத்தளங்களுக்குள்  இணைந்து வருகின்றனர்.  மேலும் நண்பர்களுடன் உரையாடுவதற்குத் தனியாக நேரங்களை ஒதுக்கிய காலங்கள் போய் வேலை நேரத்திலும் நமது அன்றாட அலுவல்களுக்கிடையிலும் இவ்வுரையாடல்களைச் செய்துகொள்ளல் அதிகரித்து வருகிறது. என்னிடம் எக்ஸ்-கதிர்ப்படம் எடுக்க வந்த ஒருவரின் வலது கை உடைந்து தொங்கிக்கொண்டிந்தது ஆனால் அவர் தனது இடது கையில் செல்லிடப்பேசியை வைத்து ருவிற்றர் செய்துகொண்டிருந்தார் எந்தளவுக்கு இச் சமூக ஊடகங்கள் எங்களூக்குள் ஊடுருவிட்டுள்ளன என்பதற்கு இது உதாரணம். அவர் தனது நிலமையை உடனடியாகத் தனது நண்பருக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தார்.

மெய்நிகர் உலகத்தில் (virtual world) விரிந்து வரும் இந்த நட்புலகத்துள்  நிலவுகிற  நடபின் அல்லது உறவின் தன்மை ஆளை ஆள்  நேரில் சந்தித்து உருவாகக்கூடிய  நட்பின் தன்மையுள் ஒப்பிடும் போது வேறாக இருப்பதாக சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.  (இவ்வாறு மெய்நிகர் உலகில் சந்தித்துக்கொள்பவர்கள் பின் நிஜ உலகத்திலும் சந்தித்துக்கொள்கிறார்கள்.)
சமூக ஊடக வலைத்தளங்களில் மனிதர்கள் தமது  அன்றாட நடத்தைகளில் தொடங்கி  தமது அனுபவங்கள் மற்றும் தமது  ஆழமான அக உணர்வுகள் வரை பரிமாறிக்கொள்கிறார்கள். இந்தப்பரிமாற்றம் ஒற்றைப்பரிமாணமாக இருப்பதில்லை. ஒரே நேரத்திலேயெ விம்பம் வார்த்தைகள் ஒலி அசைவியக்கம் என யாவற்றையும் ஆயிரக்கணக்கானவர்களுடன் பரிமாறிக்கொள்ள முடிகிறது. இந்தப்பரிமாற்றத்திற்கு வலையமைப்பு நிர்வாகிகள் வழங்குகிற தரவளவு (data limit) எல்லையைத்தவிர மன எல்லைகள் இல்லை.

இங்கு இன்னுமொரு விடையத்தையும் கவனிக்க முடிகிறது முகத்துக்கு முகமான நட்புறவில் நாங்கள் ஒரு கருத்தைப் பரிமாறும் போது எமது உடல் மொழியையும் சேர்த்தே பரிமாறுகிறோம். மொழியின் தொனி மொழி கொண்டுவரும் உணர்வு உரையாடுவர்களின் ஆளுமை போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த மெய்நிகர் உலகில் நிகழும் உரையாடலுக்குள் வருவதில்லை. இதனால் கருத்தை வாசிப்பவர் கருத்தைக் கூறுபவரின் ஆளுமைக்குள் சென்றுவிடத்தேவை இல்லாது போய்விடுகிறது. கருத்தைப்பரிமாறுபவரின் உணர்வையும் அனேகமாக புரிந்து எதிர்வினையாற்றவேண்டிய தேவை இல்லாமல் போகிறது. உளவியலாளர்கள் சமூக ஊடக வலையமைப்புக்களைத் தீவிரமாகப்பயன்படுத்துபவர்களிடம் இரக்கவுணர்வு அல்லது பரிவுணர்வு (Empathy) வெளிப்படும் உணர்வுகளைத் தானுமுணர்தல் (compassion) போன்ற பண்புகளில் பிரச்சனை அல்லது குறைபாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக முகப்புத்தகம் ருவிற்றர் போன்றவற்றில் நிகழும் உரையாடல்கள் இந்த வகைக்குள் வருகின்றன.

பல மனிதர்களுக்கு சமூக ஊடக வலையமைப்பு அவர்களது கருத்தை இலகுவான முறையில் முன்வைக்க அல்லது எனையவர்களின் கருத்தை நிராகரிக்க உதவியாக இருக்கிறது. இதனால் நிறைய மனிதர்கள் இணைய வெளியில் துணிந்து பேசவும் முன்வருகிறார்கள். மேலும் பொய்யான அடையாளம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு மெய்நிகர் உலகில் வலம் வருதலும் சாத்தியமென்பதால் மனிதர்கள் அதிகளவில் கருத்துப்பரிமாறல்களில் கலந்துகொள்வதுடன் நட்புவட்டங்களுக்குள்ளும் இணைந்து விடுகிறார்கள். விம்ப அசைவியக்கப்பரிமாற்றத்துடன் (video conversation)   கூடிய  உரையாடல்களில் இதற்குச் சாத்தியம் இருப்பதில்லை.

பரஸ்பர மனித உறவுப்பரிமாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கிற  நம்பிக்கை  என்னும் முன்நிபந்தனை  மெய்நிகர் உலகில்  நடைமுறைச் சாத்தியமற்றதாகிவிட்டது.   நான் யாராவது ஒருவருடன் மட்டும் பரிமாற விரும்புகிற விடையம் அவருக்கு மட்டுமே போய் சேரும் என்பதற்கு இந்த உலகில் எந்த உத்தரவாதமும் இல்லை.  இந்த உறவுப்பரிமாற்றத்தின் இயங்குதளம் கணணிசார் மென்பொருளின் இயக்கவடிவத்தினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. நாங்கள் எதனை எந்த அளவில் எமது நண்பர்களுடன் பரிமாற முடியுமென்பதை இந்த மென்பொருள் பொருள் தீர்மானிக்கிறது. மிக நுணுக்கமாகப்பார்த்தால் நட்புத்தளத்தின் பரிமாணங்களைத் தீர்மானிக்கும் உரிமை சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களிடம் நிஜ உலகத்தில் உள்ளது போல முழுமையாக இருப்பதில்லை. பதிலாக இந்த அதிகாரம்  இந்த வலைத்தளங்களை உருவாக்கி நிர்வகிப்பவர்களிடமே  இருக்கிறது.

அடிப்படையில் இந்த வலைத் தளங்களின் மென்பொருட்கட்டமைப்பை நன்கு விளங்கி அதனை உரிய முறையில் ஒழுங்கமைத்துப் பயன்படுத்துபவர்களைத் தவிர ஏனையவர்களுக்கு தாம் பரிமாறுகிற விடையங்கள் யார்யாரிடமெல்லாம் போய்ச்சேருகின்றன  என்ற விபரம் தெரிவதில்லை.  மேலும் இச் சமூக வலைத்தளங்களை உருவாக்குபவர்கள், அதனைப் பயன்படுத்துவர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்து தமக்கு தேவைப்படும் போது குறிப்பாக வியாபார நோக்கங்களுக்காகவும் அரசுகளின் புலனாய்வுத் தேவைக்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு மனிதரின்  நட்பு வட்டத்துள் அடங்கக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கை குறித்த ஒரு அளவுக்குள்ளேயே பௌதிக உலகில் இருக்க முடியும். இது நூறுக்கும் இருநூறுக்கும் இடையிலேயே இருக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மிகப்பிரபல்யமான நபர்கள் கூடத் தமது நட்பு வட்டம் என்று வரும் போது நூறுக்கும்  குறைவானவர்களையே நண்பர்களாக கொண்டிருக்க  முடிவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  ஆனால் மெய்நிகர் உலகில் இந்த எல்லை உடைந்துவிடுகிறது. மேலும் தனிப்பட்டவை என்பவற்றுக்கும் வெளிப்படையான எல்லோருக்கும் தெரியக் கூடியவை என்பவற்றுக்கும் இடையிலான இடைவெளியை இந்த சமூக வலைத்தளங்கள் அனேக உடைத்துவிட்டன நிகழ்வொன்று ஓன்று நிகழும் போது அதில் ஈடுபட்டு அனுபவித்தல் என்பதுடன் நின்றுவிடாது அதனை காட்சியாக அல்லது விம்பமாக பதிவு செய்து உடனே இணையத்தில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விருப்பு தூண்டப்பட்டுள்ளது. பலவேளைகளில்  குறித்த நிகழ்வை அனுபவிப்பதனைவிடவும் அதனை மெய்நிகர் உலகுக்கு கொண்டு செல்வதே அதிக மகிழ்வுதருவதாகவும் ஆகிவிட்டது.  

புதிய காலணி ஒன்றை நான்  எனது மகனுக்கு வாங்கிக் கொடுத்த போது அதனை உடனே அணிந்து அழகு பார்ப்பதை விடவும் அதனை படம் எடுத்து ருவிற்றரில் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதிலேயே அவனது முதலாவது ஆர்வம் இருந்தது. இளைய வயதினரின் ருவிற்றரில் அல்லது முகப்பக்கத்தில் பரிமாறுபவைகள் சாதாரண வாழ்வில் மற்றவர்களுடன் பரிமாறப்படவேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் உள்ளவையும் அல்ல.  பல் துலக்குதல் ஆடை அணிதல் என்பதில் தொடங்கி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது வரை சமூக ஊடக வலையமைப்பில் பரிமாறப்படுகிறது இங்கே இளையவயதினர் மட்டுமல்ல அரசியல்வாதிகள் பிரபல்யங்களில் தொடங்கி  வர்த்தக நிறுவனங்கள் வரை இந்தகலாசாரத்துள் இணைந்து வருகிறார்கள்.

Posted Image

தன்னடக்கம், தனது முறைக்கு காத்திருத்தல் போன்ற அறநெறிக்கோட்பாடுகளுக்குள் வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துள் இச்சமூக ஊடக வலையமைப்புக்கள் ஒரு முற்போக்கான மாற்றத்தையும் கொண்டு வருகின்றன. தன்னை வெளிப்படுத்தி கொள்ளல் அல்லது தனது திறமையை வளத்தை வெளிக்காட்டல்  என்பது இணைய வெளியில் அதிகரித்து வருகிறது. இதற்கு  இன்னொருவரின் தயவு அல்லது அங்கீகாரம் தேவைப்பட்ட காலம் கரைந்து போவதை நாங்கள் இங்கு அவதானிக்கிறோம்.  சுயவிளம்பரம் என்னும் இந்தப் பரிமாணம்  (தம்பட்டம் அடித்தல் என முடக்கப்பட்ட இத்தனிமனித ஆளுமை விருத்தி ) முதலாளித்துவ வளர்ச்சி அடைந்த நாடுகளில் முக்கியமான தேவையான பண்பாகவே பார்க்கப்படுகிறது. இதன் மறுபக்கமாக எதையாவது பரிமாற வேண்டும்; மெய்நிகர்வெளியில் நாளாந்தம் இயங்கவேண்டும் என்ற மன உளைச்சலுக்குக்குள் மனிதர்கள் ஆட்பட்டு விடுவதையும் காண்கிறோம் அது மட்டுமல்ல மற்றவர்களின் கவனம் தன்மேல் குவியவேண்டும் என்கிற ஒருவித ஆளுமைப்பிரைச்சனைக்குள்ளும் [Narcissism-சுயவிம்பத்தன்முனைப்பு] மனிதர்கள் சென்று விடுகிறார்கள்.

நாங்கள் எங்களை எங்கள் திறமையை எங்கள் கருத்தை வெளிப்படுத்தும் போது எதிர்பாராத கோணங்களிலும் திசைகளிலும் இருந்து எதிர்வினைகள் வருவதும் மிகவழமையானதாக ஆகிவிடுகிறது . எங்களது நல்ல முகங்களும் கெட்ட முகங்களும் வெளிப்படுகின்றன. இவ்வாறு வெளிப்படுவது மட்டுமல்ல இவை வெளிப்பட்ட மறுகணம் காற்றில் கரைந்து விடுவதுமில்லை. ஆதாரங்களாக ஆயிரக்கணகான கணணிகளில் சேமிக்கப்பட்டும் விடுகின்றன. ]நீங்கள் ஒருதடவை சொன்னாற் சொன்னது தான் அது அழியாது (மெய்நிகர் உலகம் அழிந்தாலன்றி)[ எனவே சமூக வலையமைப்புக்களில் பொறுப்புணர்வுடன் கருத்துக்களைப்பரிமாறவேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால் இளைய வயதினரிடையே இந்த விடையத்தில் நுண்ணுணர்வோ ஒழுக்கவுணர்வோ இல்லாமல் போவதை- இணைய வதை அல்லது இலத்திரனியல் வதை (Cyberbully) அதிகரித்து வருவதைக் காண்கிறோம். இந்தப்பண்பு வயதுக்கு வந்தவர்களிடமும் அவதானிக்கப்படுகிறது. சாதாரண பகிடிகளில் தொடங்கி பாலியல் வக்கிரம் நிறைந்த வதைகள் வரை பரிமாறப்படுவதைக்காண்கிறோம்.

தொடர்பாடற்பொறிமுறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் புரட்சியும் மனிதர்களின் பௌதீகவெளிக்கும் மனவெளிக்கும் மேலாக தோற்றுவித்துள்ள மெய்நிகர்வெளி சாதகமான பண்புகளையும் பாதகமான பண்புகளையும் வெளிக்காட்டி நிற்கிறது. ஆனால் நாளுக்கு நாள் இனமத வர்க்க பேதமின்றி மக்களும் அவர்களை ஆளுகிற அதிகாரங்களும் இந்த வெளியுள் தம்மை அறிந்தும் அறியாமலும் உள்நுளைந்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாகவும் ஆகிவருகின்றனர். சமூக ஊடக வலையமைப்புக்கள் மற்றும் இணையத் தொழில் நுட்பம் காரணமாக கருத்துச்சுதந்திரத்தின் எல்லைகள் அகலித்து வருகின்றன. இதுவே சகிப்புத்தன்மையின் எல்லைகளையும் அகலிக்கக்கோருகிறது. இது நிலப்பிரபுத்துவ அரைநிலப்பிரபுத்துவ சமூகங்களின் சனநாயகப்படுதலை துரிதப்படுத்துகிற அதே நேரத்தில் முதலாளித்து சனநாயகத்தின் எல்லைகளை வெளிச்சம் போட்டுக்காட்டவும் செய்கிறது விக்கிலீக்ஸின் மீது மேற்கொள்ளப்படுகிற அழுத்தங்களை நாங்கள் இங்கு கவனிக்க வேண்டும்.

அராபிய வசந்த எழுச்சிகளின் போது விதந்துரைக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்புக்களின் பங்களிப்பு  மேற்குலகில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் காரணமாகத் தோன்றிய “வோல் வீதியை ஆக்கிரமித்தல்” (OccupyWallStreet) என்னும் அசைவியக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
அரபு வசந்த எழுச்சிகளில் பங்கு கொண்ட மக்களின் பொருளாதார நிலமைக்கும் வோல் வீதியை ஆக்கிரமித்தல்” (Occupy WallStreet) என்னும் இயக்கத்தில் பங்கு கொண்டவர்களின் பொருளாதார நிலைமைகளுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடிருந்தது. அரபு நாடுகளில் கண்மூடித்தனமான பிரபுத்துவப்பண்பு நிறைந்த சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை சகிக்க முடியாததாகவும் மாறி இருந்தது.

ஆனால் மேற்குலகில் மக்கள் அடிப்படையான பொருளாதார வசதிகளைக்கொண்டிருப்பதால் மெய்நிகர் உலகில் அசைவதுடன் நின்றுவிடுகிறார்கள்.

நாங்கள் இனிமேல் முகத்தில் முகம் பார்க்க முடியாது.
வாசித்தவைகள்:

படம் நன்றி:

http://www.tomscholt...g/social-media/

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

3-11-2012

http://www.globaltam...IN/article.aspx

Open all references in tabs: [1 - 8]

Leave a Reply